×

போலியான படங்களை உருவாக்குவதில் ஏஐ பயன்பாடு ஆபத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

புதுடெல்லி: போலியான படங்களை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பெரிய சிக்கலை உருவாக்கும் என்றும் இவற்றின் தவறான பயன்பாடு குறித்து மீடியாக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நடிகை ராஷ்மிகா மந்தனா உட்பட சில இந்தி நடிகைகளின் மார்பிங் செய்யப்பட்ட முகங்களுடன் கூடிய போலியான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியது. ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் பீகார் வாலிபர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளி மிலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறுகையில் ,‘‘ பலதரப்பட்ட சமூகத்தை கொண்ட இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) மற்றும் டீப் ஃபேக் காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான மக்களுக்கு சரிபார்ப்புக்கு நேரமிருக்காது. ஒரு சிறிய தீ சமூகத்தில் மிக பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும்.சமீபத்தில் ஒரு கர்பா நிகழ்ச்சியில் நான் நடனம் ஆடும் வீடியோவை பார்த்தேன்.அந்த வீடியோ எவ்வளவு நன்றாக இருக்கிறது என ஆச்சரியப்பட்டேன்.

இது போன்ற பல ஆன்லைன் வீடியோக்கள் உள்ளன. டீப் ஃபேக்கின் அச்சுறுத்தல் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இது அனைவருக்கும் பிரச்னைகளை உருவாக்கலாம். டீப்ஃபேக்குகள் தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு மற்றும் பாதிப்பு குறித்து மக்களிடம் மீடியாக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவேன் என்று அறிவித்தது வெறும் வார்த்தைகள் அல்ல,அது நிஜமான உண்மையாகும். உள்ளூர் பொருட்கள் தயாரிப்பு குறித்த முயற்சி மக்களிடையே பெரிய ஆதரவை உருவாக்கியுள்ளது’’ என்றார்.

* அப்பாவி மக்கள் பலிக்கு கண்டனம்
தெற்கு உலக நாடுகளின் குரல் என்ற 2வது மெய்நிகர் உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் மோடி பேசுகையில், ‘‘இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடக்கும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது. மேற்கு ஆசியா சம்பவங்களினால் கடுமையான சவால்கள் ஏற்பட்டுள்ளன. உலக நன்மைக்காக அனைத்து நாடுகளும் ஒரே குரலில் பேச வேண்டும். மேற்கு ஆசியா பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தான் தீர்வு காணப்பட வேண்டும். கடந்த மாதம் பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் பேசினேன். அதன் பிறகு பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் 6.5 டன் உயிர்காக்கும் மருந்துகள், 32 டன் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

The post போலியான படங்களை உருவாக்குவதில் ஏஐ பயன்பாடு ஆபத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பேச்சு, நடத்தை விதி மீறல்...